வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மேலும் ஒருவர் கைது

41 0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (17.03.2024) யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது, 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல், கடற்படையின் கண் முன்னால் முகாம் பகுதியில் வைத்தே கணவன் மற்றும் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், கடத்தலுக்கு கடற்படையினர் உதவியுள்ளனர் என்ற மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலுசேர்த்துள்ளது.

இந்நிலையில், கடந்த நாட்களில் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.