முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

37 0

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (13) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளியுமாவார். பல ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் இருந்துவருகின்றார்.

இவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை. காரணத்தை அறிவதற்காக குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியினையும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் நேரில் சந்தித்து கேட்ட போது அவர்கள் காரணம் தெரியாது என பதிலளித்துள்ளனர்.