தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை

157 0

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 – 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

தேசிய உள்சாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தாய்ப்பாலில் சீனி கிடையாது. எனினும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களின் பின்னர் பெற்றோர் குழந்தைகளுக்கு சீனி அடங்கிய உணவுகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக இன்று நீரிழிவு நோய் மட்டம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 – 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.