சிறப்பு முகாம் கைதிகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

59 0

சிறப்பு முகாம் கைதிகள் சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

”33 வருடங்கள் தவறான சிறைவாசத்திற்குப் பிறகு சாந்தன் காலமானார். அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது.உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிறப்பு முகாமில் தொடர்ந்தும் சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.

அவர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு, அவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும், அவரை மீண்டும் பார்க்கவும், அணைக்கவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.