சிறுமி கொலை : சிறுமியின் தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை

32 0

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கைதான, அதே கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், சந்தேக நபரை 29ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேக நபர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரை நீதவான் விசாரணை செய்தார்.

அதையடுத்தே, சந்தேக நபரின் விளக்கமறியலை மார்ச் 7ஆம் திகதி வரை நீட்டித்துள்ளார்.