துருக்கியில் நடந்த வான்தாக்குதலில் குர்து இன போராளிகள் 8 பேர் பலி

232 0

தென்கிழக்கு துருக்கி பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி படை வீரர்கள் நிகழ்த்தப்பட்ட வான்தாக்குதலில் 8 பேர் சிக்கி பலியாகினர்.

துருக்கி நாட்டில் பி.கே.கே. என்று அழைக்கப்படுகிற குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை பயங்கரவாதிகள் என கூறி துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் தடை செய்துள்ளன.

பி.கே.கே. இயக்க போராளிகள் 1984-ம் ஆண்டு முதல் அரசுக்கு எதிராக நடத்தி வருகிற கிளர்ச்சியில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.2 ஆண்டுகளுக்கு முன் அங்கு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்தம் பலன் அளிக்காமல் முறிந்து போனது.

இந்த நிலையில், அங்கு ஈராக் எல்லையில் குக்குர்கா மலைப்பகுதியில் துருக்கி படை வீரர்களின் ராணுவ முகாம் மீது குர்து இன போராளிகள் சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அதைத் தொடர்ந்து குர்து இன போராளிகளுக்கு எதிராக துருக்கி படை வீரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

அதன் ஒரு அம்சமாக தென்கிழக்கு துருக்கி பகுதியில் குர்து இன போராளிகள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை ஆளில்லா விமானம் அனுப்பி வேவு பார்த்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பகுதிகளில், அவர்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குர்து இன போராளிகள் 8 பேர் சிக்கி பலியாகினர்.