ஜெயலலிதாவின் சவப்பெட்டி வைத்து ஓ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம்: மு.க ஸ்டாலின் கண்டனம்

238 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சவப்பெட்டியில் இருப்பது போல பொம்மையை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்பது ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல். இது போன்று அநாகரிகமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இத்தகைய தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்ல அனுமதித்திருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

மறைந்த அம்மையார் அவர்களின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது வழக்கமான அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடைமுறை. அதையும் தாண்டி அவரது மரணத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறீர்கள். ஆனால் இப்போது மறைந்த முதல்வரின் சவப்பெட்டியை வைத்து- அதுவும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச் சென்று குறுகிய அரசியல் நோக்கத்துடன் வாக்கு கேட்பது தேசியக் கொடியின் மாண்பையும் கண்ணியத்தையும் கறைபடியச் செய்வதாகாதா என்பதை திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு முறை யோசித்துப் பார்ப்பது நல்லது.

இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும், திரு ஓ.பி.எஸ் அணியில் உள்ளவர்களுக்கும் மறைந்த ஜெயலலிதா அம்மையார் மீது எந்த அளவிற்கு வன்மம் மனதிற்குள் இருக்கிறது என்பதையும் சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ள ஜெயலலிதாவின் உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையும் இந்த இதயமற்ற பிரச்சாரம் எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஆர்.கே நகர் வாக்காளர்கள் பண்பாடற்ற இந்தப் படுபாவிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.