நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட கிராம மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கையா?

27 0

நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட கிராமத்தில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள், முன்பள்ளிகள், பொது நோக்கு மண்டபம், விளையாட்டு மைதானம், இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் கொண்ட கிராமமாக உருவாக்க முடியுமா அல்லது நாம் வேறு இடங்களுக்கு நகர்த்தப்படப் போகிறோமா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரி நல்லிணக்கபுர வீட்டுத்திட்ட மக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கிராமத்திலுள்ள அமைப்புக்கள், பொது மக்கள் கையெழுத்திட்டு, அதன் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புத்தசாசன கலாசார அமைச்சு, வட மாகாண ஆளுநர், தெல்லிப்பழை பிரதேச செயலகம், தெல்லிப்பழை பிரதேச சபை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மற்றும் சமயத் தலைவர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினூடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த நிலையில் 33 வருடங்களாக சொந்த இடங்களின்றி இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அனுமதியுடன்  இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடுகளில் 150 குடும்பங்கள் நல்லிணக்கபுரத்தில் குடியேற்றப்பட்டார்கள்.

அன்று யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மகேசேனநாயக்க நேரடி வழிநடத்தலில் கட்டப்பட்ட நல்லிணக்கபுர குடியேற்றத்திட்டக் கிராமம் உதயமானது. அவருடைய காலத்தில் தான் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை கட்டித்தருவதாக உறுதியளித்திருந்தார். எனினும், அவருடைய காலம் முடிவடைந்தமையினால் அதை கட்டித்தர இயலவில்லை.

கிறிஸ்தவ ஆலயம் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆன்மிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குடியேற்றத் திட்ட வீடு கையளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக வருகை தந்த அன்றைய ஜனாதிபதி தனது உரையில், குடியிருப்புக்குத் தேவையான விளையாட்டு மைதானம், முன்பள்ளி, படகுத் துறை மற்றும் ஆன்மிகத்துக்காக இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதிபட கூறியிருந்தார்.

எங்களை இவ்விடத்தில் குடியேற்றவுள்ளோம் எனக் கூறிய நிலையில், நாம் அனைவரும் முன்பள்ளி, இறங்குதுறை, இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் அமைப்பது போன்றன எம்மால் முன்வைக்கப்பட்டு இவற்றை நிறைவேற்றித் தருவோம் என்று வாக்குறுதி அளித்ததற்கு அமையவே இவ்விடத்தில் நாம் குடியேறியுள்ளோம்.

இவ்வாறான சூழலில் கத்தோலிக்க ஆலயம் ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறிதாக கட்டப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஆன்மிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வேளையில், குறிப்பாக இந்த ஆலயமானது இங்குள்ள இந்து மக்கள் மற்றும் கத்தோலிக்க மக்களது தமது அன்றாட வேலைகளை முடித்து இரவிலேயே தமது உடல் உழைப்பினாலேயே இந்த ஆலயமானது கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இத்தகைய கட்டமைப்பு வேலைகள் இடம்பெறுகின்ற வேளையிலேயே பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தில் எமக்கான உரிமத்தை தாருங்கள் என கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தோம். இத்தகைய சூழலில் இந்த குடியேற்றத் திட்டத்தில் ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து பிரதேச சபையினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கானது வழிபாட்டு இடத்தை அகற்ற முடியாது என்றே கூறப்பட்டது.

இந்து ஆலயமும் இந்த குடியேற்றக் கிராமத்தில் கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் யாரும் உதவி செய்யாத நிலையே காணப்படுகிறது.

எமது பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகள் அனைத்து திணைக்களங்களுக்கும் கடிதங்கள் மூலம் பல கோரிக்கைகள் வழங்கியும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இறுதியாக மாவட்ட செயலாளராகிய உங்களிடமும் உங்கள் மூலம் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திணைக்கள அமைச்சுகளுக்கு கடிதம் மூலம் எமது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம்.

எமக்கு இந்தக் குடியேற்ற கிராமத்தில் நிரந்தரமான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்து எமது எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழ்வதற்கு துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.