மன்னார் தீவில் அரசு காற்றாலைத் திட்டத்தை கைவிடாதபோதும் தொடர்ந்து நாம் போராடுவோம்

45 0

தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்தை தெரிவித்தும் அரசு கவனிக்காது வருகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லய்னல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில்  விடுக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது

திருச்சபையின் திருவழிப்பாட்டு ஆண்டில் மீண்டும் ஒரு தவக்காலத்தில் கத்தோலிக்க மக்களாகிய நாம் காலடி பதித்துள்ளோம்.

இத்தவக்காலம் அருளின் காலமாகவும் , மனமாற்றத்தின் காலமாகவும் . ஊனியல்புக்குரிய பழைய பாவ இயல்புகளை களைந்துவிட்டு செபம் , தவம் . தானதருமம் வழியாக இறைவனோடும் தன்னோடும் அயல்வர்களோடும் ஒப்புரவாக வேண்டிய காலமாக  இந்த தவக்காலம் அமைந்துள்ளது.

இன்றைய நாட்டின் அரசியல் தொடர்பாக ஆயர் அவர்கள் இம்மடலில் தெரிவிக்கையில் தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன.

தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே தொடர்கின்றது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது.

இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே இந்நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் தொடர்ந்து நாம் செபிப்போம்.

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்போக நெல் அறுவடை நடைபெறும் இக்காலத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத சூழ்நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர்.

வறுமைக் கோட்டுக்குக்குகீழ் வாழும் குடும்பங்கள் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் பாவனையின் தாக்கத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

மன்னார் தீவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 250 மெகாவாட் காற்றாலை சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முனைப்போடு செயல்படுகின்றது.

இத்திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து எம்மாலும் பொது அமைப்புக்களாலும் பல சந்தர்ப்பங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் நாம் நமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோமாக என இவ்வாறு மன்னார் மாவட்ட இறை மக்களுக்கு மன்னார் ஆயர் தனது தவக்கால மடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.