‘நாச்சிக்குடா, வலைப்பாடு பகுதிகளுக்கு இறங்குதுறை வேண்டும்’ -கடற்தொழிலாளர்கள்

276 0

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில், இறங்குதுறைகள் இன்மையால், அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா ஆகிய கரையோரப் பகுதிகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கடற்தொழிலாளர் தமது கடற்தொலை மேற்கொள்ளும் கடற்தொழில் உபகரணங்களையும் படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியாதுள்ளது எனத் தெரிவித்துள்ள இப்பகுதி கடற்தொழிலாளர்கள், கடற்தொழில் இறங்குதுறைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது கடல்வற்றுக் கிராமங்களில், நீண்ட தூரங்களில் படகுகளை நிறுத்திவிட்டு, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து வருவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், கரையோரப் பகுதிகளில் சிலவும், கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கரையோரப் பாதுகாப்பு வேலிகளையும் இறங்குதுறைகளை அமைத்துத் தருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்