கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில், புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
அரியாலைப் பகுதியிலுள்ள வீடொன்றிலுள்ள கணவனும் மனைவியும், வேலைக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை (05) வேலைக்குச் சென்று வீடு திரும்பிவந்து பார்த்த போது, வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர்.
இதன் பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிலி உட்பட, சுமார் 25 பவுண் நகைகள் திருட்டுப் போயுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

