திருக்கோணேஸ்வரர் ஆலய நகர்வலம் குறித்து முக்கிய அறிவிப்பு

23 0

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அத்துடன் கடந்த வருடத்தை விட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சபை குறிப்பிடுகிறது.

திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடை செய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த 21ஆம் திகதி இடைக்கால தடைவிதித்து கட்டாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நகர்வலம் தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த கட்டாணை நகர்வலத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கினை சமய பெரியார்களின் முன்னிலையில் இணக்கப்பாட்டின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.