ஜெனிவா அமர்வுக்கு இம்முறை இலங்கையிலிருந்து குழு செல்லாது

36 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வமான அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இம்முறை செல்லாதென அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டள்ள மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்கவே விடயங்களை கையாளவுள்ளார்.

குறிப்பாக, இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அவதானிப்பு அறிக்கை மார்ச் மாதம் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பதிலளிப்பை வழங்கவுள்ளார்.

அத்துடன், பல்வேறுபட்ட பக்கநிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இதேநேரம், அவருக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.