ஏப்ரலுக்கு முன்னதாக தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான இடைக்கால அறிக்கை

32 0

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக நாடுகள் பல தேர்தல் முறைமைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக தேர்தல் முறைமை திருத்தத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்தியா, சிங்கப்பூர், கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, எஸ்டோனியா ஆகிய நாடுகளின் தேர்தல் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

அந்த தேர்தல் முறைகளின் ஊடாக இந்த நாட்டில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு எடுக்கக்கூடிய உதாரணங்களை புரிந்து கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதேவேளை, தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 60க்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்த முன்மொழிவுகள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆணைக்குழு பல கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. அவை பொருத்தமான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

தேர்தல் முறை திருத்தத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

தேர்தல் முறை திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னால் நீதியரசர் டெப் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.