சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொன்றவர்கள், மன்னார் சிறுமிக்கு நீதி கோரி போராடுவது கேலித்தனமானது

147 0

மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் கடந்த காலத்தில் சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு, கப்பம் கொடுக்காத காரணத்தினால்  சிறுமியை கொலை செய்து கிணற்றில் போட்டவர்கள் என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட பிள்ளையான் குழுவினர் இன்று மன்னாரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு போராடுவது ஏளனமானது; வேடிக்கையானது; கேலித்தனமானது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் வடகிழக்கு முன்னேற்றக் கழக தலைவருமான கு.வி. லவக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரானில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

மன்னாரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளார். இப்படியான செயலை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்ற நிலைகள் மாற்றப்பட வேண்டும் என்பதுடன் இந்த சிறுமி கொலையை சிவில் சமூகம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இருந்தபோதும், இந்த சிறுமி கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கம் வகிக்கும்  கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அங்கம் வகிக்கும் பிள்ளையான் தலைமையில் கடந்த 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் எப்படி செயற்பட்டார் என்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சரி, வட கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சரி, யாவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.

மாவட்டத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.  தீவுச்சேனை என்ற பிரதேசம் மர்மமாக்கப்பட்டுள்ளது. பலரை கொலை செய்ததாகவும் பலரை கடத்தியதாகவும் கடத்தலுக்கு தலைமை தாங்கியதாகவும் இவர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள்  இருக்கின்றன. எனவே, இவர்கள் ஒரு போராட்டத்தை ஆயத்தப்படுத்தும்போது தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் பார்க்கவேண்டும்.

உண்மையில் உரிமை கேட்டு போராடுவதற்கு இவர்கள் தகுதி அற்றவர்கள். இது வெறுமனே போராட்டம் அல்ல. எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகின்ற தேர்தல் மற்றும் தங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் பறிக்கப்படும் என்ற பயத்திலே தான் இவ்வாறான போரட்டத்‍தை செய்கின்றனர் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் வாழ்கின்றவர்கள் நீதி கேட்டு போராடுவதற்கு தகுதி இருக்கின்றதா என பார்க்கவேண்டும். தமது கடந்தகால வாழ்க்கை, இவர்களின் குழுவினர் எப்படிப்பட்டவர்கள் என பார்க்க வேண்டும்.

அந்த காலப்பகுதியில் எனது கிரான் விபுலானந்த வீட்டின் வீதியிலுள்ள சந்தியில் 3 பல்கலைக்கழக மாணவர்களான நமசிவாயம் புவனேஸ்வரன், செந்தூரன், இன்னொருவர் கொல்லப்பட்டார்கள். இதற்கு காரணம், இந்த குழுக்கள் என மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

இவ்வாறு இந்த போலியான, வேடிக்கையான போராட்டத்தை செய்கின்ற இவர்களை பார்க்கின்ற மக்கள், இவர்களுக்குப் பின்னால் செல்வீர்களானால், மறுபடியும் இவர்கள் ஏமாற்றி உங்கள் பிள்ளைகளை காவு கொடுப்பவர்களாக செயற்படுவார்கள். எனவே மக்களே, அவதானம் என்றார்.