கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கான உணவு கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

38 0

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 3 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிரணி எம்.பி.யான  டலஸ் அழகப்பெரும  எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா  கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை.

இந்தநிலையில், அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

நிதிப் பற்றிய குழு கடந்த வாரம் அதற்கு அனுமதி வழங்கியதுடன், திங்கட்கிழமை  அதனை உறுதிப்படுத்தியது. இதற்கமைய, 8 ஆயிரம் ரூபா  கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும்  என்றார்.