கச்சதீவு வருடாந்த திருவிழாவை புறக்கணிப்பதற்கு தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதோடு, தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க செயலாளர் எமரால்ட் தெரிவிக்கையில்,
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் திகதி மீன்பிடிக்க சென்று நான்காம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் வழக்கு 16ஆம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், இரண்டு மீன்பிடி விசைப்படைகு ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ரொபேர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனையும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2019ஆண்ட சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் மெல்வின் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்பளித்தார்.
இலங்கை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரொபேர்ட், பெக்கர், மெல்வின் ஆகிய மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று மீனவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்களது சிறையில் உள்ள தங்களது உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கூட்டத்தின் முடிவில் வரும் 23,24 ஆகிய திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்த கொள்ளாமல் தமிழக மீனவர்கள் புறக்கணிக்க வேண்டும்.
விசைப்படகு மீனவர்கள் நாளை (18) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை(18) மீன்பிடி விசைப்படகுகளில் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.
இராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்கிழமை (20) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்கு மூன்று நாட்கள் நடந்து சென்று விசைப்படகு மீனவர்கள் அனைவரும் தங்களது மடகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்தனர்.
அத்துடன், எங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச்சிட்டு வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர் என்றார்.

