முல்லையில் வனவள திணைக்களத்திடம் இராணுவத்தினர் காணிகள் கையளிப்பு

117 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல காணிகளில் முகாம்களை அமைத்து இராணுவத்தினர் தங்கியிருந்த நிலையில், தற்போது பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, இராணுவத்தினர் அந்த காணிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவ்வாறு செல்லும்போது, இராணுவத்தினர் தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை முல்லைத்தீவு  வனவள திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.

வனவள திணைக்களத்திடம் இராணுவத்தினர் கையளித்த காணிகள், அபிவிருத்தி வேலைகளுக்காகவோ அல்லது ஏனைய முக்கிய தேவைகளுக்காகவோ பயன்படுத்த வேண்டுமாயின், அந்த தேவைகளை சுட்டிக்காட்டி, வனவள திணைக்களத்திடமிருந்து காணிகளை பெற்றுக்கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (16) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாமும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பங்கேற்றிருந்த விசேட கூட்டமொன்றிலேயே இவ்விடயம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.