வடக்கில் இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா

121 0

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் வட மாகாணத்தை முன்னிலைப்படுத்தி “நட்பின் சிறகுகள்” எனும் விமானப்படை, சமூக சேவை அமைப்பின் ஊடாக பல்வேறு சமூக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை விமானப்படை தின கொண்டாட்டம் அனைத்து மத சடங்குகளுக்கும் முன்னுரிமை அளித்து ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், இந்த வருடமும் விமானப்படை தலைமையகத்தில் விமானப்படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க, தரமான கல்வி மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வட மாகாணங்களில் சமூக அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி, விமானப்படை தினத்தை கொண்டாட எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டு, அந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக 100 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 73 ஆயிரம் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், இதற்காக 25 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “Air Tattoo 2024” தொழில்நுட்பக் கல்வி கண்காட்சி மற்றும் திருவிழா நிகழ்வுகள்  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதில் இலங்கை விமானப்படையின் விமானங்கள், வளங்களின் கண்காட்சி, விமானப்படையின் பணிகள், தொழில்நுட்ப கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதன்போது பரசூட் சாகசங்கள், இலங்கை விமானப்படையின் விமான சாகசங்கள், விமான கண்காட்சிகள், விமானப்படை மோப்பநாய்களின் சாகசங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ட்ரோன் விமானங்களின்  நிகழ்வுகள், விளையாட்டுத் தொகுதிகள், தற்காப்புக்கலை, அடிமுறை சண்டைக் காட்சிகள், இந்திய விமானப்படையின்  ஹெலிகொப்டர் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இரவு நேர இசை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

விசேடமாக, மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தக்கூடிய விமானப்படையினர் பயன்படுத்தும் செயலிழந்த விமான இயந்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டமும், இலங்கையின் மிகப் பெரிய சைக்கிள் சவாரியான இலங்கை விமானப்படை “குவன் சைக்கிள் சவாரி” சைக்கிள் ஓட்டப்போட்டியும்   ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளை விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் நாயகமும் இந்த நிகழ்வின் ஏற்பட்டுக் குழுவின் தலைவருமான  எயார் வைஸ் மார்ஷல் முதித மஹவத்தகே  முன்னிலை வகித்து நடத்துவதோடு, வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினரின் ஆதரவும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை, இந்த சமூக நலத் திட்டங்களுக்கான அனைத்து செலவுகளுக்கும் தேவையான நிதியானது இலங்கை அரசின் தலையீடு இல்லாமல் கிடைக்கப்பெறுவதோடு, அதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பங்களிப்பு பெறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்குமாறு விமானப்படையினால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.