கச்சைதீவைக் கோருவது ஏற்புடையது அல்ல

147 0

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் எனவும், எனவே இலங்கை மீனவர்களின் பாதிப்பு நிலை உணர்ந்து இந்திய மீனவர்கள் செயற்படவேண்டுமென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும்போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அதற்காக அவர்கள் கச்சதீவினைக்கோருவது ஏற்புடையது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய இழுவைப் படகுகளை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் நாட்டிலும், இந்திய பாராளுமன்றிலும், இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிராகக் கண்டனங்கள்  தெரிவிக்கப்பட்டதுடன், கச்சதீவினை மீளக் கோரும் கருத்துக்களும் வலுப்பெற்றிருந்தன.

இது தொடர்பில் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இது இரண்டு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையாகும். இருந்தாலும்  இருநாடுகளும் ஒற்றுமையாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வைக்காணவேண்டும்.

அயல் நாடான இந்தியாவும், எமது நாடும் சகோதரர்களைப்போன்றது. எமது நாடு இளைய சகோதரன் எனில், இந்தியா எமக்கு மூத்த சகோதரரைப்போன்றது. இவ்வாறிருக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படும்.  அதற்காக இவ்வாறான கருத்துக்களை மூத்த சகோதரர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதால் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குறிப்பாகத் தமிழ்நாட்டையும், எம்மையும் எடுத்துக்கொண்டால் நாம் மொழியாலும் ஒன்றுபட்டவர்களாகக் காணப்படுகின்றோம்.

அந்த அடிப்படையில் உண்மைத்தன்மையை உணர்ந்து எமது மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு இந்திய மீனவச் சகோதரர்களும் இதனைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

தொடர்ந்தும் இணக்கமாக நாமும் இந்தியாவும் சகோதரப் பாசத்துடன் செயற்படும்வகையில் அவர்களுடைய கருத்துக்களும் இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது – என்றார்.