ஒரு தேசிய அரசின் தோரணையில் அதாவது எதிர்க்கட்சி இல்லாத ஒரு பாராளுமன்றத்தை உருவாக்கி அங்கு, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன ஒன்றிணைந்து, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடுமாயின் அதற்கு எங்களது ஆதரவு கிடைக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கிய கண்டி, மடவளை பஸார் பிரதேசத்தில் தனியார் அமைப்பினால் நிர்மாணிக் கப்பட்டுள்ள ‘எக்சன்’ உள்ளக விளையாட்டரங்கின் திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக பிசன்னமாயிருந்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் ஸ்ரீல. மு.கா தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் திலின பண்டார தென்னகோன், ஹிதாயத் சத்தார் அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை வியாபார சங்கத்தின் தலைவர் டபிள்யு.எம். நஜீம் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர் வருகிற பாராளுமன்ற பொது தேர்தலானது, அது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக நடைபெறுகின்ற ஒரு நிலைமை காணப்படுமாயின் நாம் ஓர் அங்கமாக இருக்கும் எமது கட்சியான சமகி பெரமுன கட்சியானது தமக்கான பெரும்பான்மைகளை சுவீகரித்துக் கொள்ளும் வகையில் பல முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டி வரும் என தெரிவித்த தலைவர் ரவூப் ஹக்கீம், தேர்தலுக்கு பிற்பாடு எல்லா கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பிற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வது தான் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என தான் நம்புவதாகவும் வலியுறுத்தினார்.
இன்று இருக்கின்ற பாராளுமன்ற சமன்பாட்டை வைத்து ஒரு தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்க முடியாது ஏனெனில் இன்று பாராளுமன்ற நிலைப்பாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமன்பாடு என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே, தேசிய அரசாங்கம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு அதிகப்படியான பெரும்பான்மை உள்ள ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மக்கள் ஒருபோதும் அதில் திருப்தி காணப்போவதில்லை. என அவர் சுட்டிக்காட்டினார்.

