பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி

231 0

படகு விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

படகு விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரனின் மகன் ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலின் மகன் ராகுல் மற்றும் குப்பனின் மகன் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன்கள் விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினத்தின் கணவர் சாமுவேல்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், புதூர் நாடு, சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையனின் மகன் விஜி மற்றும் அருணாசலத்தின் மகன் வெங்கட்டராமன்; ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், புன்னம் கிராமத்தைச் சேர்ந்த மினியப்பனின் மனைவி இருளாயி ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம், சிங்கித்துறையைச் சேர்ந்த ஜோதி பர்னாந்துவின் மகன் அருள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் ஆறுமுகம் மற்றும் செய்யூர் வட்டம், கடப்பாக்கம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் மகன் வேலு ஆகியோர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகு கவிழ்ந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதூளை கிராமத்தைச் சேர்ந்த ராமையாவின் மகன் சக்காத்து மற்றும் ராமுவின் மகன் பாலு ஆகிய இரு மீனவர்களும் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குப்புராஜின் மகன் சசிகுமார் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகு கவிழ்ந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.