சூரியவெவ, பொல்பஹா பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான உறவின் காரணமாக ஏற்பட்ட தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சூரியவெவ, பத்தேவெவ விகாரைக்கு அருகில் உள்ள மரமொன்றில் சந்தேகநபர் இன்று (07) காலை தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ, பத்தேவெவ பொல்பஹ பகுதியைச் சேர்ந்த பிரதீப் அனுராத என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர், சூரியவெவ பொல்பஹா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுரங்கிகா நடிஷானி என்பவரை கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் சில காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகநபர் அவரை கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கொலை செய்த பின்னர் சந்தேகநபர், சூரியவெவ பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சூரியவெவ பத்தேவெவ விகாரைக்கு அருகில் உள்ள மரமொன்றில் சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

