பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

47 0

யாழ்ப்பாணப்பாணத்தில் பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி வடக்கைச் சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பனை தென்னை வள சங்கத்திற்கு தொழிலாளி சென்ற வேளை, முகாமையாளருடன் தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து, தொழிலாளி மீது முகாமையாளர் மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து வீடு திரும்பிய தொழிலாளி, சுகவீனமுற்ற நிலையில் 31ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டு உள்ளமையும், அந்த முறிவுகளினால் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக நிமோனியா ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், முகாமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.