கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்! 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

168 0

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (04)  இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்துக் கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களுக்கு கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின்போது புனர்வாழ்வு நிலையத்திலிருந்து16 கைதிகள் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சோமாவதி பகுதியில் உள்ள  வங்கி  ஒன்றுக்கு அருகில் இருந்த உல்லாச விடுதிக்குச் சொந்தமான  பஸ் ஒன்றைக் கடத்த முயன்றனர்.

இதன்போது, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கி கையடக்கத் தொலைபேசி மற்றும் 56,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட பின்னர் மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சரணடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.