வைத்தியசாலைகளின் இயல்பு நடவடிக்கைகளுக்கு உதவ முப்படையினருக்கு அழைப்பு

220 0

நாடளாவிய ரீதியில் 72 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை (01) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தடைப்படும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான படையினரை பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, தற்போது மேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மஹாமோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை, பலாங்கொடை, எகலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம, ஹோமாகம மற்றும் கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகள்  தடையின்றி தொடர்வதற்கு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த வைத்தியசாலைகளின் தேவைக்கேற்ப சுமார் 700 இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால் மேலதிக படையினரை அனுப்புவதற்கு தயார்ப்படுத்துமாறும் பொதுமக்களின் சுகாதார தேவைகளை  தடையின்றி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதியினால் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 72 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் காலை 6.30 மணி முதல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.