மன்னாரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ; இளம் தாய் காயம்

66 0

மன்னார் நானாட்டான் பகுதியில் பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த இளம் தாய் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தை பிறப்பிடமாகவும்  அரிப்பு துறையில்  வசிப்பவர் என்று தெரிய வருகிறது.

அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி ஆண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் நாட்டான் பஸ் தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி குழந்தை ஒன்றுடன் குறித்த இளம் தாய் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் தாய் காயங்களுக்கு உள்ளாகிய போதும் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் அருகில் உள்ள நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது