சமூக வலைத்தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை கட்டுப்படுத்தினேன்

146 0

பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூகலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்பத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு  மேலும் கூறுகையில், ஊடகங்களுக்கு முகாமைத்துவமும், ஊடக கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சட்டதிட்டங்கள் கடுமையானதாக இருந்தாலும் ஊடகங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் அவசியமாகும்.

எமது நாட்டில் சில ஊடகங்கள் மிகவும் மோசமான முறையிலேயே செயற்படுகின்றன.

எனது மூத்த மகளின் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர். அரிசி, தேங்காய் போன்ற சமையறையில் இருந்த பொருட்களையே கொண்டு சென்றுள்ளனர்.

எனக்கு கட்டாரில் அரச தலைவருக்காக வழங்கப்பட்ட பரிசொன்றை பொலனறுவை நூதனசாலையில் வைத்துள்ளேன். ஆனால் ஊடகமொன்றில் காலையில் பத்திரிகை செய்தி வாசித்த அறிவிப்பாளர் ஒருவர் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிசை தனது மகளின் வீட்டில் வைத்திருந்தாக கூறியுள்ளார். அது பொய்யாகும். நான் நூதனசாலையிலேயே எனக்கு கிடைத்த பொருட்களை வைத்துள்ளேன்.

நான் ஜனாதிபதியாக இருக்கும்போது கிடைத்த அனைத்து பொருட்களையும் அந்த நூதனசாலையிலேயே வைத்துள்ளேன்.

ஆனால் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தவறானவையாக உள்ளன. இதனை மாற்ற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

எனக்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் பொலன்னறுவையில் உள்ள நூதனசாலைக்கு சென்று பார்த்துக்கொள்ள முடியும்.

அத்துடன்  நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திகனவில் கலவரம் ஏற்பட்ட போது ஒருவாரத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்கினேன். அதனை நான் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டில் சிங்கள முஸ்லிம்  கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும்.

சமூகவலைத்தலளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதாலே அதனை கட்டுப்படுத்த முடிந்தது. எவ்வாறாயினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் மிகவும் இறுக்கமானதாகும்.

ஊடக ஒழுங்குமுறை, கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என்றார்.