முதலை தாக்குதலுக்கு இலக்காகிய அநுராதபுரம் சிறைச்சாலை கைதி

142 0

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோது, பெரும் முயற்சியில் முதலையிடமிருந்து மற்றொரு கைதியால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய தமிழ்க்  கைதி ஒருவரே முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை வளாகத்தில் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் பாதிக்கப்பட்ட  கைதியுடன்  மற்றும் சிலர் நேற்று  (22) பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தபோது மூங்கில் புதருக்கு அருகில் மறைந்திருந்த முதலை ஒன்று கைதியின் காலைப் பிடித்து இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலையின் தாக்குதலுக்கு உள்ளான கைதிக்கு ஒரு கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட  பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.