நிகழ்நிலை காப்பு சட்டம் : இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கரிசனை மற்றும் உயர்நீதிமன்றத் தீர்மானம்

71 0

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டம் (சட்டமூலம்) மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதன் அங்கத்தினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தமது கரிசனையை வெளிப்படுத்துகின்றன.

இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சட்டமூலத்தின் நோக்கமாக இணையவழி இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பரந்தளவில் சமூகத்துக்குப் பொருந்தாத பல சர்ச்சைக்குரிய காரணிகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது.

2023 நவம்பரில், உயர் நீதிமன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றக் குழு விவாதத்தில் முன்மொழியப்படவுள்ள திருத்தங்களைக் கருத்தில் கொண்டு, சட்டமூலத்தில் உள்ள 56 உறுப்புரைகளில் 31, ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தின் பிரதிபலிப்பு உள்ளிட்ட ஜனநாயகம் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு ஏற்ப திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆணையத்தின் செயற்பாடுகள், அதன் சுயாட்சி மற்றும் குற்றங்களின் வரையறைகள் உட்பட அதன் கட்டமைப்பை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமூலமானது அதன் விதிகளில் பல குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக விதிமுறைகளின் தெளிவற்ற வரையறை மற்றும் குற்றங்களை வரையறுப்பது, தன்னிச்சையான மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் கணிசமான சவால்களை முன்வைக்கிறது. இது பல்வேறு வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டின் சாத்தியமான குற்றமயமாக்கல் பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது. ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களும் வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்த தயங்கக்கூடிய சூழலை உருவாக்கலாம்.

பேச்சு சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளை குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுவதுடன் சுய தணிக்கை சூழலும் உருவாகலாம்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மையை சமரசம் செய்யக்கூடிய எந்தவொரு அரசியல் அல்லது பிற செல்வாக்கையும் தவிர்த்து, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தொடர்புடைய தொழில்துறை அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளதுடன், நியமனங்கள் அரசியலமைப்பு பேரவையினால் பரிசீலிக்கப்பட்டு, அதன் விளைவாக நியமனத்துக்காக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலமானது அதன் உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தில் சமநிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், தவறான தகவல் மற்றும் இணைய வெறுப்பு பேச்சுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருக்கும்போது, அத்தகைய நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதையும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.

மேலும், இது போன்ற ஒரு சட்டமூலத்தை உருவாக்க அதிக நேரம் மற்றும் கூடுதல் ஆலோசனைகள் தேவை என்பதையும், மற்றும் இணைய இடைத்தரகர்கள் மற்றும் உள்ளடக்க-பகிர்வு தளங்களை ஒழுங்குபடுத்துவதன் அவசியத்தை நிவர்த்தி செய்வதில் சமநிலையை எட்ட வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களின் கருத்து சுதந்திரத்தையும் ஒரு ஜனநாயக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறும் சமூகத்தை பாதுகாக்க இந்த சமநிலை அவசியம் என்பதையும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வலியுறுத்துகிறது.