யாழ். குடாநாட்டிற்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமான ஆறுமுகம் திட்டத்திற்கு வட மாகாண சபை ஒப்புதல் வழங்கினால் அதற்கான நிதியை வழங்குவதற்கு தயார் என பிரதமரின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் மாசடைந்துள்ள நிலையில் அதற்கான மாற்றீடாக பல ஆயிரம் மில்லியன் ரூபாவில் ஓர் திட்டமாக இரணைமடு குடிநீர்த் திட்டம் தயாரிக்கப்பட்டது. இருப்பினும் இரணைமடுக் குளத்தின் நீர் அந்த மாவட்டத்தின் பாவனைக்கே போதாத நிலையில் அதனை வெளியில் எடுத்துச் செல்ல விரும்பாத மாவட்ட விவசாயிகள் தமது தேவையினை பூர்த்தி செய்த பின்னர் நீர் இருக்குமாயின் அதனை எடுத்துச்செல்லலாள் என்றனர். அதன் பிரகாரம் அது கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இதனால் இத் திட்டத்திற்கு வட மாகாண சபை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் யாழ் குடாநாட்டிற்கான நீரிற்கான மாற்றுத் திட்டம்தான் என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த நேரமே நீண்ட காலத்திற்கு முன்னர் ஆறுமுகம் பொறியியலாளரால் தயாரிக்கப்பட்ட திட்டம் முன்மொழியப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்த உதவுமாறு அதிகாரிகளினாலும் சில அரசியல்வாதிகளினாலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரதமர் அலுவலகங்களில் கோரிக்கை விடப்பட்டிருந்த்து. இதற்கமைய நேற்று முன் தினம் வட மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த அபிவிருத்திக் கூட்டம் பிரதமரின் செயலாளர்களான சரித்த ரத்வத்த மற்றும் பாஸ்கரலிங்கம் ஆகியோரின் தலமையில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பில் கருத்து தெரிவித்த செயலாளர்கள் குடாநாட்டிற்கான குடிநீர்த் திட்டித்திற்காக ஆறுமுகம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் இணக்கமும் நிதி வழங்குநர்களின் ஒப்புதலும் கிடைத்துள்ளது இதனால் இத் திட்டத்தின் மூலம் புதிய தேக்கத்தில் இருந்து குடாநாட்டிற்கான நீர் விநியோகத்தினை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இத்திட்டத்திற்கான
வட மாகாண சபையின் எழுத்துமூலமான ஒப்புதலை வழங்கினால் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையினை முன்கொண்டு செல்ல முடியும் அதனை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வட மாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை எடுத்து சம்மதம் கிடைத்தால் அதற்கான நிதியீட்டலுக்கான பணியினை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வழங்கும் . எனத் தெரிவித்தார்
இரணைமடு குடிநீர்த் திட்டகாலத்தில் அத் திட்டம் பொருத்தமற்றது. ஆறுமுகம் திட்டமே உகந்த்து என வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது