ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின் விளக்கு சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன்

225 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன்தான் கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் கமி‌ஷனிடம் மதுசூதனன் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க. பிளவுபட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2 அணிகளும் புதிய சின்னத்தில் போட்டியிடுவதால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றன. ‘இரட்டை மின் விளக்கை ஓ.பி.எஸ். அணியினர் தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இரட்டை மின் விளக்கை, இரட்டை இலை போல பச்சை நிறத்திலும், இலை போன்ற வடிவத்தையும் வாக்காளர்களிடம் தவறாக கொண்டு செல்வதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

டி.டி.வி.தினகரன் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது. அதனையடுத்து மதுசூதனன் சார்பில் தேர்தல் கமி‌ஷனிடம் இன்று விளக்க கடிதம் கொடுக்கப்பட்டது.அதில் இரட்டை மின் விளக்கை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. டி.டி.வி.தினகரன்தான் அ.தி.மு.க. கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க. கட்சி பெயரையும் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வரச்சொன்னால் வேட்பாளர் மதுசூதனன் நேரில் வந்து விளக்கம் தர தயாராக இருப்பதாகவும் ஓ.பி.எஸ். அணி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.