தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்கள் ஏட்டிக்குப்போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

34 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் மத்திய குழு கூட்டத்தினைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் பொதுச்சபை உறுப்பினர்களின் மூலம் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.

தற்போது வாக்களிப்பதற்கான அட்டைகள் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், தலைமைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சுமந்திரன், மற்றும் சிறீதரன் ஆகியோர் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (12) சுமந்திரன் திருகோணமலைக்குச்சென்று கூட்டங்களை நடத்தியிருந்த நிலையில் சிறீதரன் இன்றையதினம் (13) திருகோணமலைக்குச் சென்று கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து ஏனைய மாவட்டங்களிலும் அவ்விதமான கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறிருக்கையில், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனததிராஜா மத்திய குழுக் கூட்டத்தினைக் கூட்டுமாறு பதில் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ள நிலையில் அக்கூட்டத்தினை ஆரம்பத்தில் 16ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு முனைப்புச் செய்யப்பட்டபோதும் தற்போது 20ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.