ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தார் இளவரசி ஆன்

140 0

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne,)  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின்  உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது.

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் புதன்கிழமை  (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இந்நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,  சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோர் வரவேற்றனர்.

இதேவேளை, கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர்  வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் விஜயம் செய்தனர்.

இலங்கையில் பிரித்தானிய இளவரசி தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக கொழும்பில் உள்ள சேவ் தி சில்ட்ரன் அலுவலக ஊழியர்களை இளவரசி ஆன் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளை கேட்டு அறிந்துகொண்டார்.

மேலும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசி ஆன், சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். அத்துடன் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்கும் சமூக-உணர்ச்சி கற்றல் கருவித்தொகுப்பான ‘தில்லி’ திட்டத்தின் அமர்வையும் அவதானித்தார்.

குறித்த வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களையும் இளவரசி ஆன் பார்வையிட்டார்.