ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்கியது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

54 0

வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரும் வழக்கு விசாரணையின் போது ரொக்கமாக வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தொகையை நியாய விலைக் கடைகளின் மூலமாக ரொக்கமாக வழங்க தடை கோரியும், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக் கோரியும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல இந்த நிவாரண நிதியை அதிகரித்து வழங்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவரான செல்வக் குமார் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கும் ரூ.6 ஆயிரத்தை உடனடி நிவாரணமாக ரொக்கமாக வழங்கலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில் மாநில அரசு பிளீடர் பி.முத்துக் குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா ரூ.6ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.31.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவி கோரியுள்ள 7 லட்சத்து 3 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப் பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி கணக்கில் நிவாரணம் செலுத்தப்படும். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏ.டி.எம்-கள் செயல்படாத நிலையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளைப் பெற்று அவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகையை செலுத்த அதிக காலதாமதம் ஏற்படும் என்பதாலும், பலர் தங்களது ஏ.டி.எம் கார்டுகளை வெள்ளத்தில் தொலைத் திருக்கக் கூடும் என்பதாலும் நியாய விலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக நிதி வழங்கப்பட்டது. இதில் எந்த குளறுபடிகளும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் அரசு கண்ணும், கருத்துமாக செயல்பட்டது.

தகுதியான பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டே இந்த தொகை நேரடியாக வழங்கப் பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்தவொரு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் எழவில்லை. இதே போல மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, பயிர் சேதத்துக்கு இழப்பீடு, கால்நடைகளுக்கு இழப்பீடு,சேதமடைந்துள்ள படகுகளுக்கான இழப்பீடு போன்றவற்றையும் அதிகரித்து முதல்வர் உத்தரவிட் டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்.2-க்கு தள்ளிவைத்தனர்.