புதுக்குடியிருப்பு தோரவில் குளம் நிரம்பியதால் பல குடும்பங்கள் பாதிப்பு

108 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர் கொண்டுள்ளார்கள்.

தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து நீரினால் மூழ்கி காணப்படுவதால் வீதியால் செல்லமுடியாத நிலை கிராமத்திற்கு செல்லும் சிறு வீதிகளும் குளத்து நீரினால் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படாத மூங்கிலாறு, தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளமாகும். அண்மையில் பெய்த மழை வெள்ளத்தினால் குளம் நிரம்பி மக்களின் காணிகள், வீடுகள், வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்றும் தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேராவில் கிராமத்திற்கு செல்லும் முதன்மை வீதி மற்றும் மூங்கிலாறு கிராமத்திற்குள் செல்லும் சிறு வீதிகள் இரண்டு இரண்டு கோவில்கள் குளத்து நீரில் மூழ்கியுள்ளன.

குளக்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்று முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் குளத்திற்கு கிழக்காக கட்டப்பட்டுவரும் புதிய பிள்ளையார் கோவில் ஒன்றும் நீரில் மூழ்கியுள்ளன.குளத்து நீரினை வெளியேற்ற முடியாத நிலையில் குறித்த குளம் அமைந்துள்ளது.

பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு இன்று 15 நாட்களுக்கு மேலாக மக்கள் இவ்வாறான அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

நிலத்தடி நீருக்கும் கால்நடைகளுக்குமான நீரினை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குளத்தில் நன்னீர் மீன்பிடி நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்கள்.

குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதற்கான எந்த பகுதியும் இல்லாத நிலையில் குளம் அமையப்பெற்றுள்ளது.

குளத்தினை அண்மித்த கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலையில் சில குடும்பங்கள் காணப்படுவதுடன் மலசகூடங்கள், கிணறுகள் அனைத்து நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன.

இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூன்று குடும்பங்கள் இன்றும் தங்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்கின்றார்கள் மேலும் பலமக்களின் காணிகளுக்குள் குளத்து நீர் நீரம்பி காணப்படுகின்றது.

பாம்பு உள்ளிட்ட விச ஜந்துகளின் தொல்லை காணப்படுவதாகவும் இவ்வாறன நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று தெரியாநிலையில் குளத்து நீர் வற்றுவதற்கு இரண்டு மூன்று மாதம் எடுக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் நிலை தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியும் ஒருதடவை வந்து பார்வையிட்டு விட்டு சென்றவர்கள் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.