எமது நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம்.
கடந்த வருடம் மூவாயிரம் முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்காரணமாகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வருகிறோம். எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் இதனை நிறுத்த மாட்டேன். நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எமது நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கவே நாம் செயற்படுகின்றோம் என்பதை யுக்திய நடவடிக்கையின் போது தொடர்ச்சியாக கூறினோம். எந்த தடைகள் வந்தாலும் பின்வாங்காமல் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு வழங்க மாட்டோம்.
கடந்த வருடம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அந்த 8 ஆயிரம் முறைப்பாடுகளில் மூவாயிரம் முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளாகும். இதன்காரணமாகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வருகிறோம்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்களில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக என்னை தொடர்பு கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலையும் (நேற்று) தூதுவர் ஒருவர் தொடர்பு கொண்டார். ஏதோ ஒரு வகையில் இதனை நிறுத்துமாறு கூறினார். நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன். நான் இதனை நிறுத்த மாட்டேன். எதிர்வரும் 23 ஆம் திகதி இதனை கொண்டு வருவேன். இது தொடர்பில் யோசனைகளை 08 ஆம் திகதி முன்னர் தெரிவிக்க முடியும். அவர்களின் கருத்துக்களை இதில் உள்வாங்க முடியுமா என ஆராய்வோம். முடிந்தவற்றை செய்வோம். நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கவே இவை அனைத்தையும் செய்கிறோம் என்றார்.

