பொன்னாவெளி மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக அமைச்சர் அனுர திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-பொன்னாவெளி அனைத்து மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் கொழும்பில் வைத்து புதன்கிழமை (03) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு நேரடியாக வருகைதந்த ஜே.வி.பியினர் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வெளிப்படுத்திய நிலையில் இந்த கலந்துரை இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது , “ சுண்ணக்கல் அகழ்வு நடைபெற்றால் பல கிராமங்கள் அழிவடையும். கடல் நீர் உட்புகும். கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர வேண்டிவரும்” என பல விடயங்களை அமைச்சர் அனுர திசநாயக்கவின் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதனைக் கேட்டறிந்த அமைச்சர், பொன்னாவெளி மக்களின் பிரச்னைகளை வெளி உலகத்திற்குக் கொண்டு செல்வதாகவும், குறிப்பாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வெளிப்படுத்த உள்ளதாகவும், போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

