தள்ளாடும் படகைப் போன்றுள்ள நாட்டை மீட்க மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

55 0
மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில், இலக்கொன்று இல்லாமல் பயணித்து தள்ளாடிக்கொண்டிருக்கும் படகைப் போன்றுள்ள நாட்டை அந்த அபாயத்திலிருந்து மீட்பதற்கான பொறுப்பு மக்கள் கைகளில் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது :

மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றோம். அந்த எதிர்பார்ப்புகளுக்குள் எமது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டியதன் அவசியமும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமும், நேர்மையானதும், நீதியும் நியாயமும் கொண்ட சமூகமும் எமது நாட்டில் உருவாக வேண்டும் என்பவை உள்ளடங்குகின்றன.

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கான வாய்ப்பு இவ்வாண்டில் கிடைக்கவுள்ளது. குறிப்பிட்ட இலக்கொன்று இல்லாமல் தள்ளாடும் படகைப் போன்றுள்ள நாட்டை அந்த அபாயத்திலிருந்து மீட்பதற்கான பொறுப்பு மக்கள் கைகளில் ஒப்படைக்கப்படவுள்ளது.

தாய்நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டுக்காக பிரார்த்திக்குமாறு சகல மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். வறிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் என்றார்.