மட்டக்களப்பில் கால்நடைகளுக்கு ஏற்படும் அவலநிலை : 5 நாட்களில் கொல்லப்பட்ட 15 மாடுகள்

103 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 15மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மாடுகள் காணாமல்போயுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பு தெரிவித்துள்ளது.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களினால் தற்போது கால்நடைகள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சுட்டும்,சுருக்கிட்டும் 15க்கும் அதிகமான மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மாடுகள் காணாமல்போயுள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேய்ச்சல் தரை காணிகளை பிடித்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக தினமும் பசுக்கன்றுகள் உணவு இல்லாமல் சாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதற்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் நிலைமை மோசமடையும் நிலைமையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரம் அழிந்துசெல்லும் நிலைமை காணப்படுவதாகவும் இதன்காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுவருவதாகவும் நிமலன் தெரிவித்துள்ளார்.

கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும் 105நாட்களையும் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரையில் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதிகளை கணக்கிடமுடியாத நிலையுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.தமக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரண் முற்றுமுழுதாக அத்துமீறிய செய்கையாளர்களுக்கு உறுதுணையாகவுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பினைக்கூட நடைமுறைப்படுத்தமுடியாத வகையில் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.