லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

252 0

உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். முதல் நாள் போராட்டத்திலேயே தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் ஒருவர்கூட பங்கேற்கவில்லை. அதிகாரிகள் இல்லாத சூழலில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள், அவற்றை ஏற்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் போன்றவை குறித்து அமைச்சரால் தெளிவான முடிவுக்கு வர இயலாது. அதனால் தான் நேற்றைய பேச்சுவார்த்தையின்போது எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிய அமைச்சர், முடிவெடுக்க அவகாசம் கோரியுள்ளார்.

தமிழகத்தில் அரசு எந்திரம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. வலுவாக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்கே இந்த நிலைமை என்றால், அப்பாவி மக்கள் தரும் மனுக்களின் கதியை நினைத்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முட்டைகள் போன்ற எளிதில் அழுகக்கூடிய பொருட்கள் தான் அதிக அளவில் தேங்கியுள்ளன. உடனடியாக வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அந்த பொருட்கள் அழுகி பெரும் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயரக்கூடும்.

இவற்றை உணர்ந்து லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.