அம்பாறை மாவட்டத்தில் கனமழை ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

57 0
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை,  ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.

தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன.

அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.