கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை செல்லும் பாதையை திறக்குமாறு மக்கள் கோரிக்கை

54 0

நீண்ட காலத்திற்கு முன்னர் 763, 769 மற்றும் 764 ஆகிய வழித்தட பேருந்துகள் பயணித்த கீரிமலை – காங்கேசன்துறை வீதியை திறந்து மக்களின் இலகுவான பயணத்திற்கு வழி சமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை போவதாக இருந்தால் ஐந்து கிலோமீட்டர்கள் சுற்றி தான் போகவேண்டி உள்ளது. ஆனால் குறித்த வீதியால் சென்றால் வெறும் ஒன்று அல்லது ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் காங்கேசன்துறைறையை சென்றடைய முடியும்.

குறித்த வீதியால் செல்லும்போது இந்துக் கோவில், புத்த கோவில், கிறிஸ்தவ கோவில் என 5 கோவில்கள் உள்ளன. பாதையை திறந்தால் அந்த ஆலயங்களை தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.

கொழும்பிலேயே இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயத்திற்கு அருகினால் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. ஆனால் இந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது.

இங்கு இருக்கின்ற இராணுவத்தினருடன் எமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை, ஆனால் ஏன் இந்த பாதையினை பூட்டி வைத்திருக்கின்றீர்கள்? ஒரு கிலோமீட்டர் பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றியை பயணிக்க வேண்டியுள்ளது.

இங்கு கடத்தல் பிரச்சினை ஒன்றுமே இல்லை பின்னர் எதற்காக பாதையை அடைத்துள்ளீர்கள்? வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா இடங்களான சடையம்மா சமாதி, கிருஷ்ணன் கோவில், குகை மற்றும் ஊற்றல் என்பன குறித்த பகுதிக்குள் உள்ளன. எனவே இந்த பாதையை திறந்தால் நாங்கள் அங்கே செல்ல முடியும்.

யுத்த காலத்தில் பாதையை அடைத்து வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் யுத்தம் முடிந்த இத்தனை வருடங்களுக்கு பின்னர் மக்களும் குடியேறியுள்ள நிலையில், நாங்கள் இராணுவத்தினருடன் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கின்றோம்.

இவ்வாறு இருக்கும் போது எதற்காக பாதையை பூட்டி உள்ளீர்கள். தற்போது காங்கேசன் துறைமுகமும் திறக்கப்பட்டுள்ளது.எனவே இந்த பாதையை திறந்தால் மக்களும் சந்தோசமாக போக்குவரத்து செய்வார்கள் என மக்கள் தெரிவித்துள்ளனர்.