காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் துணுக்காயில் பதிவு நடவடிக்கை

47 0
காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்றைய தினம் (20) துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் துணுக்காய், ஐயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதிகளிலிருந்து  நேற்று வருகை தந்து, சாட்சியமளித்து ஆவணங்களை வழங்கியிருந்தனர்.

அவ்வேளை, கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவுகள்,

தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையில்லை என்றும், காணாமல்போன தமது உறவுகளின் இறப்புச் சான்றிதழ்களை வழங்க எத்தனிப்பதாகவும் தெரிவித்ததோடு, தமது உறவுகளை திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளனர்.

அத்துடன், கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகர், எமக்கு இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகளின் முறைப்பாடுகள். அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், அவர், இது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கிடைத்தவற்றுள் 4786 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும், அவற்றில் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரியுள்ளதாகவும், அவற்றில் 1300 விண்ணப்பங்கள் இழப்பீட்டு  அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து, உறவுகளை தேடும் மக்களுக்கு வழங்க தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.