வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடப்பட்டன ஆமைக் குஞ்சுகள்

49 0

கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் புதன்கிழமை (20) மாலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடுவிக்கப்பட்டன.

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி கடற்கரையில் ஆமைகளால் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து குஞ்சு பொரித்த  பின்னர் அவை கடற்கரையில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டு 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 27 ஆமைக் குஞ்சுகள் வெளியில் வந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இதன்போது, புதன்கிழமை மாலை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆமைப் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று குறித்த 27 ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

குறித்த கடலாமை அரியவகையான (Olive Ridley) மஞ்சள் நிறச் சிற்றாமை வகையச் சேர்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.