வடக்கில் ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் நல்லிணக்க பொறிமுறை குறித்து கலந்துரையாடல்

81 0

வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான்,  தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் யாழில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றதோடு,  உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி,  இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் ஷால்க் ஆகியோர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது பிரதான விடயமாக இருந்தாலும், அந்நிகழ்வுக்கு அப்பால் பல்வேறு சந்திப்புக்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்து செயற்படும் குரலற்றவர்களுக்கான அமைப்பு,  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான வடக்கு, கிழக்கு சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் உறவினர்கள், நேரடிச் சாட்சியங்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக,  தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து,  ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல்,  நடைமுறையில் அதனை வெற்றி பெறச் செய்தல் என்பதில் கடுமையான பிரயத்தனம் செய்துவருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்படி தூதுவர்கள் முயற்சிகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் வடக்கில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு,  விசேடமாக சரணடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சாட்சியாளர்களை அழைத்து சரணடைந்த பகுதியை அடையாளம் காணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான ஆலோசனைகளையும்,  சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகியன நிதிப் பங்களிப்பையும் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.