வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதிலடி : தனிநாட்டுக் கோரிக்கை வீணானது என்றும் சுட்டிக்காட்டு

92 0

இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட இதர விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற விவாதமானது வாக்கு வங்கி அரசியலுக்கானது என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி   தெரிவித்தார்.

அத்துடன், இனப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை ஐக்கிய இலங்கைக்குள் தீர்த்துக்கொள்வதற்கு அனைத்து சமூகங்களும் இணங்கியுள்ள நிலையில், தனிநாட்டு கோரிக்கை அல்லது தாயக தேசக் கோரிக்கை என்பது வீணாக காலத்தை கடத்துவதற்காக சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் முன்னெடுக்கும் செயற்பாடாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த 5ஆம் திகதி தமிழருக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவரான எலியட் கொல்பேர்னினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கையின் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகரகம் குறித்த விவாதத்தில் பங்கேற்கவுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தல் கடிதமொன்றை இரகசியமாக அனுப்பி வைத்திருந்த நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு குறித்த விவாதம் சம்பந்தமாக விசேட அறிக்கையொன்றை கோரியிருந்தது.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறித்த விடயம் சம்பந்தமாக பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெஸ்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மையப்படுத்திய விவாதம் சம்பந்தமாக அறிக்கையொன்று பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உள்நாட்டு நிலைமைகள் குறித்து விவாதத்தில் பங்கேற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய தெளிவின்றி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமை உறுதியாகின்றது.

அவ்விதமான வெளிப்படுத்தல்கள் பற்றி ஆராய்கின்றபோது, பிரித்தானிய அரசியல்வாதிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதிகளில் தமது வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்வதற்காகவே செயற்பட்டுள்ளனர்.

ஆகவே, குறித்த வெஸ்மினிஸ்டர் மண்டப விவாதமானது, வாக்கு வங்கி அரசியலுக்கானது என்பது மிகத் தெளிவான விடயமாகின்றது. அந்த வகையில் அவ்விடயம் சம்பந்தமாக நாம் பெரிதாக கரிசனைகளைக் கொள்ளவில்லை.

இருப்பினும், தவறான தரவுகள் மற்றும் தகவல்களுடன் புரிதலின்றி வெளிப்படுத்தல்கள் சம்பந்தமாக நாம் கவலை அடைகின்றோம். அதுமட்டுமன்றி சில முக்கிய விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

விசேடமாக, தற்போது இலங்கையின் உள்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள். அதற்காக அவர்கள் கடந்த தேர்தல்களில் ஆணையும் வழங்கியுள்ளார்கள்.

அவ்வாறான நிலையில், தனிநாட்டுக் கோரிக்கை அல்லது தாயக தேசக் கோரிக்கையானது வெறுமனே ஒருசில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக காலத்தினைக் கடத்தும் செயற்பாடாகவே அமையவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளது.

எனினும், நடைமுறைச் சாத்தியமான வகையிலான கோரிக்கைகள் பற்றியே சிந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதை நோக்கிய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.

அதுமட்டுமன்றி, தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் அதேநேரம் அதற்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே, புலம்பெயர் தேசங்களில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் உள்நாட்டு யதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ளாது அவர்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் தவறாக வழிநடத்துவது பொருத்தமற்ற அணுகுமுறையாகும்.

இதனால், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எந்தவிதமான நன்மைகளையும் அடையப்போவதில்லை. மாறாக, புலம்பெயர் தேச தமிழ் அமைப்புக்கள் மட்டுமே தமது நலன்களை அடைவார்கள்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.

எம்முடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு உதவிகளை கணிசமாகச் செய்ய முடியும். அதன் மூலம் அம்மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்.

அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தடையாக இருக்கப்போவதில்லை. மேலும் அரசாங்கமும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இதுகால வரையிலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அதற்கான விசேட அறிவிப்புக்கள் காணப்படுகின்றமை சான்றாக உள்ளது என்றார்.