வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19 வரை கனமழை தொடரும்

62 0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிற மழையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மழை நிலைமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.

ஏற்கனவே இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தரை மேல் நீர்பரப்புக்கள், அவற்றின் உவர் நீரை வெளியேற்றுகின்ற இந்த சூழ்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான அபாய நிலை தென்படுவதாக அறிய முடிகிறது.

எனவே, தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் மழைவீழ்ச்சி தொடர்பான அளவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும் என தெரிவித்தார்.