மட்டக்களப்பில் வீதியை ஊடறுத்துப் பாயும் வெள்ள நீர்!

57 0

தற்போது வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதோடு, பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்துள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்தும் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 6 அங்குலமும், அக்குளத்தில் 10 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

வாகனேரி குளத்தின் நீர்மட்டம் 16 அடி 11 அங்குலமும், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6 அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16 அடி 5 அங்குலமும், அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13 அடி 6 அங்குலம் அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

புணானை அணைக்கட்டு 4 அடி 7 அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16 அடி 2அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி 2 அங்குலமும் அதிகரித்துள்ள நிலையில், அக்குளத்தின் 2 வான்கதவுகள் 2.5 உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 41 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 85.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 69.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 35 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், இதனால் பல தொற்று நோய்களுக்கு தாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.