புதிய மீனவ கொள்கை வரைவுக்கு எதிராக மன்னாரில் கையெழுத்து வேட்டை

61 0

புதிய மீனவ கொள்கை வரைபுக்கெதிராக கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமை (14) காலை 11 மணியளவில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மீனவர்களின் ஏற்பாட்டில், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் அனுசரணையில் குறித்த  கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கையெழுத்துகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காரணமாக கடற் தொழில் சமூகத்தை பெரிதும் பாதிப்படைய வைத்திருந்தது. இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற் தொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி மீனவ  சமூகத்திற்கு முடிவு வழங்குமாறு கோரி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடல் தொழில் சமூகத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள கடற்றொழில் சட்டம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற் தொழில் சமூகத்தை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்க முயற்சிக்கின்றது. இவ்வாறு வர்த்தக மயப் படுத்தப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக வரைவை சட்டத்துக்கான   எதிர்ப்பினை ஒவ்வொரு இடங்களில் கடற்தொழிலாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கான ஒதுக்கீடுகள் மிக குறைவாக உள்ளது.

மேலும் கடல் தொழில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் உணவு இறக்குமதி கொள்கைகள் முன்மொழியப் படுகின்றன.  இந்த நிலையில்  இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு தொழில் கப்பல்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதை முற்றும் முழுதாக எதிர்க்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையால்  பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றி அமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்கள் மூலம் கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் .

கடந்த பல வருடங்களாக இந்திய இழுவை படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வரும் வட இலங்கை கடற் தொழில்  சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.